Saturday, 1 August 2020

தேசிய கண்தான விழா - ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதிவரை அனுசரிக் கப்படுகிறது

தேசிய கண்தான விழா

ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதிவரை அனுசரிக் கப்படுகிறது.

.தானத்தில் சிறந்தது கண் தானம். படிப்பறிவிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருந்தாலும் , கண் தானம் செய்வதில் நம் இன்னமும் பின் தங்கியே உள்ளோம் .

கண் தானத்தை பற்றிய சில உண்மைகளையும் , விளக்கங்களையும் நாம் அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது ஆகும். கண்தானத்தின் தேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கண்தான இருவார விழா, நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதிவரை அனுசரிக் கப்படுகிறது

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து தானம் வழங்கப் படும் கண்களை எதிர்பார்த்து 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது.

கண் தானத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். இதைத் தவிர்க்க ஆக.25 தொடங்கும் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

கண் தானம் செய்ய, நாம் செய்ய வேண்டியவை என்ன?

1.   நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கண்தான உறுதிமொழி எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்று கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.

 

2.   கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உ.ம். கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.

3.   இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும். இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.

4.   கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச்செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.

5.   கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.

 

6.   ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்று நோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

கண் வங்கியின் செயல்பாடுகள்

கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.

 

கண் பார்வையை பாதுகாக்க சில குறிப்புகள்:

 

·         எழுதுவது, படிப்பது போன்ற பணிகளின்போது அதற்கு தேவையான அளவு வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

·         கணினியில் வேலை  செய்யும்போது அல்லது தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களில் அடிக்கடி கண்களை மூடி திறக்க வேண்டும். அதாவது கண்களை சிமிட்ட வேண்டும். மேலும்  அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவுவது நல்லது.

·         கண்களில் தூசு ஏதாவது விழுந்தால் கைகளால் அழுத்தக்கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம்  செய்வது நல்லது.

·         சாலைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்யும்போது கண்களில் கண்ணாடி அணிந்து  கொள்வது நல்லது.

·         40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண் பரிசோதனை செய்ய வேண்டும். 

·         நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

·         கண்பார்வை பிரச்னைகளால் 12 வயதிற்கு  உட்பட்டவர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, 5 வயதாகும் போதே குழந்தைகளின் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

·         குழந்தைகளுக்கு  ஏற்படும் இதுபோன்ற கண் பார்வை பிரச்னைகளுக்கு சரியான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம்.

·         உணவில் பால், முட்டை, கீரை மற்றும்  பழங்கள் போன்றவை தேவையான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

 

மேலும் சில முக்கிய ஆலோசனைகள்

 

·         நம் நாட்டை பொறுத்த வரையில் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏறப்டும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவமனை மேற்கொள்ளலாம்(இப்போது சில மருத்துவ மனைகளில் உதவி செய்கிறார்கள்.  அணைத்து மருத்துவ மனை மருத்துவர்களும் இந்த கண் தானத்திற்கு உதவி செய்தால் சிறப்பாக இருக்கும்).

·         உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடைந்து விட்டால் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்தால் அதன் மூலம் கருவிழி பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் பயனடைவார்கள்.

·         இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும். மருத்துவமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவார்கள்.

·         நம் நாட்டில் விபத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். விபத்துகள் காவல்துறை வழக்குகள்  சம்பந்தப்பட்டவை என்பதால் பல்வேறு நடைமுறைகள் முடிந்து 6 மணி நேரத்திற்குள் கண்களைத் தானம் பெற முடியாத நிலை உள்ளது. இப்படி இறப்பவர்களின்  கண்களை 6 மணி நேரத்திற்குள் தானம் பெறும் வகையில் உரிய மாற்றங்களை அரசு மேற்கொண்டால் கண்தான பற்றாக்குறையைக் குறைக்க அது பெரும்  உதவியாக இருக்கும்.

·         ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடலை மண்ணில் புதைத்து, அதனால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்படும்போதோ எவ்வித பலனுமின்றி  போகக்கூடிய அந்த நபரின் ஆரோக்கியமான இரு கண்களை தானமாக கொடுப்பதால், வாழும் நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். கண் தானம் என்பது  நம்மைப் போன்ற சகமனிதர்களுக்கு நாம் வழங்கக்கூடிய விலைமதிக்க முடியாத பரிசு. நமது கண்களை தானம் வழங்கி பார்வையிழப்புகளை தடுக்க நாம்  ஒவ்வொருவரும் உறுதியெடுத்துக் கொள்வோம்.

 

இருக்கும் வரை கண் நலனை பாதுகாப்போம் , இறந்த பின்னர் நம் கண்கள் , பார்வை இழந்தவர்களுக்கு உதவுவதற்கு கண் தானம் செய்வோம்

சென்னையில் உள்ள சில முக்கியமான கண் வங்கிகள்

·         சி.யு ஷா கண் வங்கி சங்கர நேத்ராலயா,தொலைபேசி எண்  044 – 28281919

·         ராஜன் கண் மருத்துவமனை - கண் வங்கி தொலைபேசி எண் : 044 28340300

·         அகர்வால் கண் மருத்துவமனை - கண் வங்கி ,தொலைபேசி எண் 044 -28116233

·         அரசு. கண் மருத்துவமனை , எழும்பூர்,தொலைபேசி எண் : 044 - 28555281

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கட்டுரையாளர் : அ.மகாலிங்கம்,

மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை

வல்லுனர்களின் கூட்டமைப்பு (இந்தியா) & முன்னாள் கல்வி அதிகாரி மற்றும்

மேலாளர் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை, சென்னை.

தொடர்புக்கு: mahali@mahali.in / தொலைபேசி எண் : 97104 85295

 

 


No comments:

Post a Comment